வாகன இரைச்சல்களை வாசலில் பூட்டவிட்டு மரத்தின் நிழலில் நனைந்தது அந்த பூங்கா.பார்ப்பவர் நெஞ்சம் குளிரச்செய்து சற்று இளைப்பாற தூண்டும் அழகான இடம்.குளிர்ச்சியான அந்த இடத்தில் ஒரு சூடான விவாதம்.
“ஏன் மலர் இப்படி பேசறீங்க.என் மேல உங்களுக்கும் காதல் இருக்கு தானே?இல்லைன்னு என்னை ஏமாத்தாதீங்க.உங்களையும் ஏமாத்திகாதீங்க”
“திரும்ப திரும்ப இதையே தான் பேச போறியா மது.எனக்கு விருப்பம் இல்லை .அவ்வளவு தான்”
“இத்தனை நாள் நாம் பழகினது பொய்யா?”
“என்ன பழக்கம் பெரிய பழக்கம்.என்னை இறக்கி விடும் போது கையில் பணம் வைக்கும் பழக்கம்”
“இப்படி பேசாதீங்க மலர்.அது வேற.என்றைக்கும் உங்கள நான் என் அப்படி பார்த்ததில்லை”
“நிஜமாகவா?நம் முதல் சந்திப்பு ஞாபகம் இருக்கா உனக்கு….அந்த இரவுக்காயத்திற்காக மன்னிப்பு கேட்க வந்தது நினைவிருக்கா”
“அன்று தவிர….அந்த சம்பவத்திற்காக நான் வருத்தபடலை.உங்களை என் வாழ்க்கையில் கொண்டு சேர்த்த நல்ல தருணமா அதை பார்க்கிறேன்”
“இப்போ வரைக்கும் நானும் அப்படி தான் நினைச்சேன்.ஒரு நல்ல நண்பன் இருப்பதா நம்பினேன்…ஆனா”
“காலம் முழுதும் நான் உங்க நண்பனா இருப்பேன்.நான் எதும் தப்பா கேட்கலையே…என்னை கல்யாணம் செய்துகோங்கன்னு தான்…….”
“நிறுத்துங்க மது போதும் பேச்சு இனி உங்களை சந்திக்க விரும்பலை”
“இப்படி சொன்னா எப்படி.நீங்க என்னை ஏமாத்த பார்க்கறீங்க.உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கு என் மேல காதலும் இருக்கு..பின்ன என்ன தயக்கம்…உங்க தொழிலா..அது எனக்கொரு பொருட்டே இல்லை”
“என்ன சொல்ல வரீங்க மது.பொருட்டே இல்லைன்னா..எப்போதும் இதை செய யலாமா?நீங்க சொல்லற கல்யாணம் பிறகும்”
“மலர்……”
“ஏன் கோபப்படறீங்க.உங்களுக்கு ஒரு விலைமாதுக்கு வாழ்க்கை கொடுப்பது பெரிய தியாகமா இருக்கலாம்.அது பற்றி எந்த கவலையும் எனக்கில்லை.”
“தியாகமா….நான் நேசிக்கும் ஒருத்தர என்னை கல்யாணம் பண்ண சொல்றது தியாகமா.இப்போ மறுக்கறீங்க.நீங்க இழக்கப்போவது என்னன்னு உங்களுக்கு தெரியலை”
“ஓ….உனக்கு இந்த மாதிரி வாழ்க்கை எல்லாம் அமையாது பேசாம சம்மதம் சொல்லுங்கறியா…ச்சி”
“அய்யோ நான் அப்படி சொல்ல வரலை….ப்ளீஸ் மலர்”
“இங்க பாருங்க…இத்தோட முடிச்சிப்போம்…நீங்க கிளம்புங்க….”
“மலர் மலர்…இருங்க….கொஞ்சம் நிதானமா பேசுவோம்…அதுக்குள்ள விலகாதீங்க.உங்க தடை என்னன்னே புரியலை.என் மேல சந்தேகமா…என் காதல் மேல சந்தேகமா…நிச்சயம் உங்க மனசுல நான் நிறைஞ்சி இருக்கேன் அது நிச்சயம்”
“திரும்ப திரும்ப அதையே பேசாத மது.இரண்டு மணி நேரமா இதே பேச்சு.காதல் கத்தரிக்காய் எல்லாம் இல்ல….நான் போறேன்.இனி என்னை சந்திக்காத”
“பின்ன என்னடி உன் ப்ரச்சனை”
மதுவின் கை மலரின் கையை பதம் பார்க்க…அவனிடமிருந்து திமிறி தன் கைவிலக்கிக்கொண்டவள்…தீயாய் வார்த்தை கக்கினாள்
“இப்போ காசுகாக நான் கொடுப்பதை நீ ஃப்ரீயா அனுபவிக்க திட்டம் போடறன்னு நினைக்கறேன்.போதுமா என் காரணம்”
இடிவிழுந்தவன் போல் அப்படியே சுருண்டு உட்கார்ந்தான் மது.நீண்ட மௌனம்.நீண டது இடைவெளி.எழுந்து நின்றான்.தன் சட்டை பையிலிருந்த தங்க சங்கிலியையும் ஆயிரம் ரூபாய் பணத்தையும் அவள் கையில் திணித்தான்.அவள் முகம் பாராமலேயே
“நான் போறேங்க.இனி உங்களை தொல்லை பண்ண மாட்டேன்”
விருட்டென்று சென்றான்.பூங்கா தாண்டி சாலையில் சென்று மறைந்தான்
இங்கு கையில் அவன் கொடுத்த ,”மதுமலர்”என்ற டாலர் சேர்த்த,அவனின் முதல் சம்பளம் அவள் கையில் மின்ன…..அதை மார்போடு அனைத்து கொண்டு விம்மி விம்மி அழுது கொண்டிருந்தாள் மலர்.அவள் மனக்கண்ணில் மதுவுடன் கடந்த இனிமையான பொழுதுகள்.தம்பி தங்கை என மதுவின் பெரிய குடும்பம்..
வாழ்க்கை தேடி ஒரு போராட்டத்தில் முதல்வெற்றிபடியில் வேலையுடன் மது.
“மன்னிச்சிடு மது .நீ என் உயிர்.மன்னிச்சிடு.நீ நல்லா இருக்கனும்.”
அவள் தொலைபேசி அழைத்தது ஒரு வண்டின் ரீங்காரமாய்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக