புதன், 1 ஜூலை, 2026

காதல் வலி

 

காதல் வலி

 

பட்டாடை உடுத்தி கொண்டேன்

பொன்நகைகள் பூட்டிக்கொண்டேன்

தோழிமார் சூழ மேடையும் ஏறிவிட்டேன்

 

நண்பனாய் நுழைந்து

காதலாய் கலந்து விட்ட கண்ணாளா

உம்மைத்தான் கண்களால் தேடுகின்றேன்

காதலால் கரைகின்றேன்

 

மணமகளாய் நான் மேடையேற

மணமகனாய் நீர் வேண்டுமென்று

புதுசட்டை பையில் காகிதம் கண்டீரோ

ஒருதலை காதல் என்று கிழித்து போட்டீரோ

 

தூதாய் நான் கொடுத்த புத்தாடை போட்டுவந்து

துரிதமாய் எனை கொண்டள்ளி போவீர் என்று

கனவு பல கண்டுவிட்டேன்

பகல் கனவு தான் கண்டுவிட்டேன்

 

இன்னொருவர் மாலை ஏற்கும் இந்நேரம்

இனியவரே நீர் மட்டும் இல்லாமல் போனீரே

சிற்பமாய் சிரித்திருந்த என்னை காதல் வலியால்

கல்லாய் செய்தீரே

 

 சொல்லாத காதல் எல்லாம் சுமையாய்த்தான்

போகுமென்று அறிந்து கொண்டேன்

இல்லாத காதலோடு இல்லறம் நடத்தத்தான்

கழுத்தில் தாலியும் ஏற்றுக்கொண்டேன்

 

மண்டப வாசலில் யாரது நீர் தானோ!

உம் கண்ணில் கண்ணீர் துளி தானோ!

என் விதியே!என் செய்வேன்

என் விதியே என் செய்வேன்

 

என்னை வாழ்த்தி நிற்கும் தெய்வங்காள்

வரம் ஒன்று வேண்டுகின்றேன்

அவருக்கும் காதல் எனில்

அந்த காதல் காகிதம் தான்

அவர் கையில் என்றும் கிடைக்காமல் போகட்டும்

கருத்துகள் இல்லை: